Pages

Thursday, May 26, 2022

சிவகாமியின் செல்வன் 03

அந்தக் காலத்தில்  சத்தியமூர்த்திக்கும் காமராஜுக்கும் இருந்த அன்புக்கும் பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பை சொல்லிவிட முடியாது.  காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்று தான் எல்லாரும் சொல்வார்கள்.  ஆனால் பொதுவான நிலை அதுவல்ல. காமராஜரே சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்ததுண்டு.  சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர்.  ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர்.  அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியாதவர்.  அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜுக்கே உண்டு.  அது மட்டுமல்ல, சாத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார். 

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரத்தில் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் காமராஜுடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும் திசை தப்பித் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறியதில்லை. ஒரு சின்ன உதாரணம்: 

1940ல் சத்தியமூத்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார்.  மேயர் என்ற முறையில் சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அச்சமயம் காமார்ஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைலைவராக இருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பட்டு விதித்திருந்தது.  சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து இது பெரிய தவறு இல்லையா என்று கேட்டார் காமராஜர்.

ஆமாம் அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்.  நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன் என்றார். செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள் என்றார் காமராஜ். வேறு வழி இல்லமால் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

அண்மையில் இந்த செய்தியை என்னிடம் கூறிய போது,  அப்புறம் என்ன செய்தீர்கள் என்று நான் கேட்டேன்.

இதை பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று என்னைக் கேட்டார்கள்.  மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன் என்றார் காமராஜ்.  சரி அந்த கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.  என் வீட்டில் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும் தேடிப் பார்க்கணும் என்றார்.

சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாக சந்தித்தது எப்போது, நினைவில் இருக்கிறதா என்று கேட்டேன்.

1919ல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேச வந்திருந்தார்.  அப்போது நான் ஒரு சாதாரண தொண்டன்.  அவரோடு அப்போது பேசவே முடியவில்லை.  அப்புறம் 4 வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்கு சந்தர்ப்பம் உண்டானது.

1923ல் திரு சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்ய பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா?  அப்பா அந்தக் கட்சியின் கொள்கைப் பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமைய்யர் இல்லத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.  இப்போது அவர் இல்லை.  நானும் அந்தக் கூட்டத்துக்குப் போனேன். சத்தியமூர்த்தி சுயராஜ்ய கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார்.  காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்ய கட்சியின் கொள்கை.  அதுதான் சத்தியமூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது.  அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் ப்ரவேசத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்கள்.  நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக்கூ டாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.  

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு வேலை ஆயிற்று. 

அந்த காலத்தில்  திரு.ரங்கசாமி அய்யங்கார், திரு எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தாங்க.  காரணம் திரு ரங்கசாமி ஐய்யங்காருக்கு சொந்தத்தில் பத்திரிகை இருந்தது.  அதனால் பிரபலமடைய சுலபமாயிருந்தது. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல.

முன்னுக்கு வந்தபோது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி பதவி என்று வரும் பொது மட்டும் அதைத் தானே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு வீட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருந்தார். பதவி மீது சத்தியமூர்த்திக்கு ஆசை இல்லை என்பது அர்த்தமில்லை.  அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமல் போனது.  காங்கிரஸ் காரிய கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு.  ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது.  மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போனது.

1927ல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.  இதற்கு காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு இல்லாமல் இரவு பகலாகக் காரிலே சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான்.  அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும்.  அந்த சமயம் ராஜாஜி காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு வீட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  சத்திய மூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்து எடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை.  கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக்கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பி விட்டார்.

பத்திரிகையில் அந்திரிகள் பெர்த் பட்டியல் வந்தபோது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது.  பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி.  அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

எந்த போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலிஸாரைக் கதர் குல்லாய்க்கு சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார்.  பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களை காங்கிரஸ்காரர்களுக்கு சலாம் போடவும் வைத்தார்.  ஆனால் அந்த போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போடவில்லை.  அந்த கவுரவத்தை சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான்.

\உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் தேசபக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அப்போது சிறையில் உள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும் மாகாண காங்கிரஸ் கமிட்டி தேர்தலும் நடைபெற்றன.  சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவை சொன்னபோது அவர் சரி என்று சொன்னார்.  ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.  அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி அப்போது தலமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டும் இன்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936ல் பொது தேர்தல் வந்த போது தேர்தல் பிரசாரத்துக்காக சத்யமூர்த்தியும் நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.  அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.  திரு.குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சியில் யாரும் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை இருத்த ஏற்பாடு செய்தனர்.  இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்கு புறப்பட்டு வரும்படி தலைவர் சத்யமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர்.  அதை கண்ட சத்தியமூர்த்தி என்னை பார்த்து, குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே.  அவர் போட்டியிடவில்லை என்றால் பிரச்னை தீர்ந்துவிடும் அல்லவா.  நீ என்ன சொல்கிறாய்.  ராஜாவுக்கு தந்தி கொடுத்து ஓதுங்கிக் கொள்ள சொல்லலாமா என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராக இருப்பதுதான் நல்லது என்று எனக்கு தோன்றியது.  ஆகையால், நாம் இருவரும் மதுரைக்கு சென்று ராஜாவையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம் என் யோசனை கூறினேன்.  ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது.  தலைவரும், நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.  சத்தியமூர்த்தி, அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து என்னிடம் உங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், இப்படிச் சொன்னால் போதாது மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால் தான் நம்புவேன் என்றார். சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமிராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936ல் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்தியமூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

படேலும் அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.  சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை.  அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கு, அவர் மகளுக்கும் கீழ் பர்த்தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள்.  அதைக் கண்ட படேல் தம் மகளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்கு கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அப்புறம் 1939 கடைசியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டாங்க  இல்லையா?  அந்தப் போட்டியில் வகுப்பு வாதம் காரணமாக சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார்.  அதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்று இரவு என்னைப்  பார்த்து காமராஜ் அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன்.  முள்ளை  முள்ளால்தான் எடுக்க வேண்டும்.  வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி.  நீ தலைவனாக இரு.  நான் உனக்கு காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன் என்றார்.

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன்.

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன்.  இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறினார் சத்தியமூர்த்தி.  தாம் கூடியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார்.  பலத்த போட்டி இருந்தபோதிலும், சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது.  அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னை பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார் காமராஜ்.

அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார் என்று கேட்டேன்.  ஆமாம், அந்த கதையை அப்புறம் சொல்கிறேன் என்றார் காமராஜ்.

(தொடரும்)















Tuesday, May 24, 2022

சிவகாமியின் செல்வன் 02

டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரே தமாஸும், வேடிக்கையும்தான்.  சில தலைவர்களை பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதை பற்றியும் சொல்லிவிட்டு ஹோ ஹோ என்று சிரிக்கத் தொடங்கி விட்டார்.

காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்கு சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை.  அந்த சிரிப்பில் கேலி இருந்தது.  ஐயோ இவர்களெல்லாம் இப்படிக் கோழைகளாக இருக்கிறார்களே என்ற பரிதாபம் இருந்தது.  சிறிது நேரம் சிரித்துவிட்டு பிறகு, அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவர்களும் சரியில்லையேன்னேன், எந்த சமயத்தில் எதை பேசுவது, எதை பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலையே, வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே என்று மீண்டும் சிரிக்கிறார்.

ஜனசங்கம், சுதந்திரா இந்த கட்சிகளுடன் கூட்டுசசேரும் முயற்சிக்கு என்ன தடங்கல் என்று நான் கேட்டபோது நான் என்ன செய்யட்டும், குஜராத்துக்கும் மைசூரும் ஒத்துவரமாட்டேங்குதே, அவங்க ஊர்ப் பிரச்சினை அவங்களுக்கு, அவசரப்பட்டால் சில காரியங்கள் கெட்டுப் போகுமே.  எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித்தான். நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக்கூடாதேங்கிறதுதான்.  

சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க.  அப்படின்னா அது ஆபத்ததில்லையா?  அந்த பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்.

இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக்காவா?

அவங்க ப்ரோ இந்திரா, அந்த அம்மாவுக்கு பதவி தான் முக்கியம்.

நீங்கதானே அவங்களை பிரதமராப் போட்டீங்க, இப்ப நீங்களே வருத்தப்படறீங்களே?

நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்ததாலே இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப பட்டிருப்பாங்க, நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச்சுத்தான் போட்டேன். இப்படி ஆகும்னு கண்டேனா? நாட்டையே அடகு வச்சுடுவாங்க போலிருக்கே.  கோபமும் எரிச்சலும் வருகின்றன அவருக்கு.  பேச்சிலே ஒரு வேகம், தவிப்பு.

இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையை தடவிக் கொள்கிறார்.  சட்டையின் விளிம்பை சுருக்கி மேலே தோள்பட்டைவரை தூக்கிக் கொண்டு போய் சேர்க்கிறார்.  "உம், இருக்கட்டும்" என்று மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார்.

எனக்கு ஒண்ணுமில்லே, இந்த தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு, நான் என்ன செய்வேன்?

இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு சரி பார்ப்பம் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுக் குழந்தை போல சிரிக்கிறார்.  எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்திஜியின் கபடப்மற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்த சிரிப்பு.

சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக்கல்லே?  அப்படி நீங்கள் வந்திருந்தால் இந்த சங்கடம் இருந்திருக்காதே?வாஸ்தவம் தான்.  வேறே யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவி இருக்கலாம். நாமே போயி பதவியில் உட்கார்ந்துக்கிட்டா சரியாகிடுமா? அப்பவே காரியக் கமிட்டீ அங்கத்தினர்களில் பெரும்பாலோரும் ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுகிட்டாங்க.  அடுததாப்லே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வர போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியில் போயி உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்கு கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?

இந்திரா காந்தியை எப்படி தேர்வு செய்தீர்கள்? அந்த விவரத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா?

நேருவுக்கு பிறகு நமக்கு மிஞ்சி இருந்த ஒரே தலைவர் சாஸ்திரி தான்.  நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்தன.  சாஸ்திரி ரொம்ப சாது, காந்தீயவாதி, நேர்மையானவர், எளிய சுபாவம்.  அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நமமை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்தபோது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்த செய்தியைக் கேட்டு ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை.  நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது.  ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்களாகப் போயிட்டாங்க. காந்தி, படேல், பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட்டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார. காங்கிரஸைக் கலைச்சுடலாம்னு. எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச் சொல்றார்னு விளங்கல்லே, இப்போதுதான் புரியுது. அப்பவே கலைச்சு இருந்தால் இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும்.  அது நாட்டுக்கும் நல்லதாய் இருந்திருக்கும். 

சாஸ்திரியின் காரியங்கள் எல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க.  தான் பிரதமரா வரமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது. இருந்தாலும், மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும். விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு. எப்படி இருக்கு தலைமை, என்ன செய்யப் போறீங்கன்னு பொதுவா பேச்சை ஆரம்பிச்சாங்க.  என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லலை.

நீங்க பேசாமல் வீட்டிலே போயி உட்காருங்க, நான் கூப்பிட்டு அனுப்பிச்சா அப்ப வாங்க, அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும் எதுவும் பேசாதீங்க, உங்ககிட்டே யாரவது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரசிடெண்டைப் போயி கேளுங்கன்னு சொல்லி அனுப்பிடுங்கன்னேன். 

அடுத்தாப்பலே பத்திரிக்கைக்காரங்க போயி அந்த அம்மாவைக் கேட்டப்போ எனக்கு ஒன்னும் தெரியாது, காமராஜ் என்னை பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்க சொல்லிட்டார், அவரைப் போய்க் கேளுங்கன்னு பதில் சொல்லியிருக்காங்க.  அது பேப்பர்லேகூட வந்ததா நினைவு என்றார். 

இந்திராவை போடலாம்னு ஏன் நினைச்சீங்க, மொரார்ஜி தேசாய் வந்திருக்கலாமே என்றேன்.

நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையயாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை, அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க.  காரியக் கமிட்டீ அங்கத்தினர்களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க.  எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரையும் தனித்தனியாக கலந்து பேசினேன். என் மனசிலே இந்திரா காந்தியைப் போடலாம்னு ஓர் அபிப்பிராயம் இருந்தது.  ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே  காட்டிக்கல்லே.  ரொம்ப பேர் இந்திராவை வேண்டாம்னு சொன்னாங்க. ஆனாலும் அவர்களோடு எல்லாம் நான் ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணினேன்.  அப்புறம் அவர்கள் அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க.  ஆனால் மொரார்ஜி ரொம்ப பிடிவாதமா இருந்தார். எம்.பி.க்கெல்லாம் லெட்டர் எழுதினார்.  நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டி போட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன்.  அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார்.  வேறு வழியில்லாமல் மறுநாள்  பார்ட்டியில் வைத்து வோட்டெடுத்தோம்.  இந்திராவுக்குத் தான் மெஜாரிட்டி கிடைச்சுது.

சரி, இந்திராவை பிரதமராக்கினீர்களே அதுக்கப்புறம் முக்கியமான பிரச்சினைகளில் உங்களைக் கலந்துக்கிட்டுத் தானே இருந்தாங்க?

ஆமாம், கலந்துக்க கிட்டு தான் இருந்தாங்க.  ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னை கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க.  திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய தப்பு. நான் அப்ப சென்னையில் இருந்தேன்.  இந்திரா எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச்  சொன்னாங்க.  நானும் போனேன். என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க. 

அப்படிச் செய்யக் கூடாது, ரொம்பத் தப்பு. வெளிநாட்டு வியாபாரம் கெட்டுப் போகும்.  வெளிநாட்டில் கோடிகோடியா கடன் வாங்கி இருக்கோம், அதை இரண்டு மடங்கா திருப்பிக்  கொடுக்க வேண்டியிருக்கும்.  டீவேல்யூவேஷன் அவசியந்தான்னு நினச்சா அதை பற்றி பொருளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப்படாதீங்க, ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்.

அதுக்கு என்ன சொன்னாங்க?  

இல்லே, காபினெட் மெம்பெர்ஸ் ஒத்துக்கிட்டாங்கன்னு சொன் னாங்க. காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது.  எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ண சொன்னேன்.  என் பேச்சைக் கேட்கல்லே.  அப்பத்தான் இந்த அம்மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது.  நாட்டை இவங்க கிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடுமாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டுது.

ஏன் நீங்கே அப்புறம் கூப்பிட்டு கேட்கிறதுதானே?

கேட்டேன்.  டிவேல்யூவேஷன் மேட்டரை பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியலை. ரகசியமா செய்ய வேண்டிய காரியம் அது, இதுன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் கமிட்டியில் இதை பத்தி பேசினோம். என்ன லாபம்? காரிய கமிட்டியில் இதை திருத்த முடியுமா? கண்டிக்கத்தான் முடியும்.  கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு?  எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது?  அன்றுதான் எனக்கு கவலை வந்தது. இந்த அம்மாவிடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துனு நினச்சேன்.  நான் என்ன செஞ்சுத்  தொலைப்பேன்னேன்.

சிரிப்பு, பலத்த சிரிப்பு, எக்காளச் சிரிப்பு.  தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு, அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது.

பார்ப்பம், பொறுமையா இருந்துதான் காரியத்தை சாதிக்கணும்.  மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார், பிடரியைத் தேய்க்கிறார், தவிக்கிறார்.  மீண்டும் அந்தகக் குழந்தைச் சிரிப்பு.

(தொடரும்)


Friday, May 20, 2022

சிவகாமியின் செல்வன் (காமராஜரின் அரசியல் வாழ்க்கை) 01

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் நான் டில்லிக்குப் போயிருந்தபோது காமராஜ் டில்லியில் முகாம் போட்டிருந்தார்.  அவரைப் பற்றி வேறுஒரு வார பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கி இருந்தேன்.  காமராஜ் அப்போது முதலமைச்சர் பதவியில் இல்லை.  ஆனால் காமராஜ் திட்டம் காரணமாக நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களிடம் அவருடைய செல்வாக்கு இமயமலை போல் வளர்ந்திருந்தது. 

டி.டி.கே., அதுல்யகோஷ், எஸ். கே. பாட்டில் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.  

டி.டி.கே இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுல்யகோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.  காமராஜ் கர்மா வீரர் என்றும், தன்னலமற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்றாஸ் ஸ்டேட் ரொம்ப காமராஜ் மயமாகிறதென்றும்  அவர்கள் பாராட்டி பேசிக் கொண்டிருந்ததையும் மறக்கவில்லை. காமராஜ் அதையெல்லாம் சங்கோசத்துடன் கேட்டுக் கொண்டு மௌனமாக உட்கார்ந்து இருந்தார்.

டில்லியில் காமராஜின் அன்றாட அலுவல்களை போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிருந்தேன். நடராஜன் காமராஜுக்கு நீண்ட நாட்களாக அறிமுகமானவர்.  காமராஜ் போகும் இடங்களுக்கு அவரைப் பின்பற்றி நானும் நடராஜனும் போய்க்கொண்டிருந்தோம்.

அந்த காலத்தில் காமராஜின் வலது கரம் என்று சொல்லக்கூடிய திரு. ராஜகோபாலன் ஒரு நாள் காலை ஆகாரத்துக்குத் தம் இல்லத்துக்கு வரும்படி காமராஜையும் கூடவே எங்களையும் அழைத்திருந்தார்.  அன்று நாங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 9 ஆகிவிட்டது. 

அன்று காலை 9 மணிக்கு நேரு வீட்டில் காமராஜர் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் ஒன்று இருந்தது.  காமராஜுக்கு அது தெரியாது.  கூட்டம் பத்தரை மணிக்கு என்றுதான் அவரிடம் யாரோ தகவல் கொடுத்திருந்தார்கள்.  அதனால் அவர் சாவகாசமாக ராஜகோபாலன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  

திடீரென்று நேரு வீட்டில் இருந்து ராஜகோபாலனை இந்திரா காந்தி டெலிபோனில் அழைத்து காமராஜ் அங்கே இருக்கிறாரா 9 மணிக்கு மீட்டிங்  இருக்கிறதே இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து காத்திருக்கிறார்கள்.  நேருஜி காமராஜுக்காகக் கூட்டத்தை ஆரம்பிக்காமல் உட்கார்ந்திருக்கிறார் என்றார்.  இந்த செய்தியை ராஜகோபால் காமராஜிடம் சொன்னபோது அவர் பதறிப் போனார்.  நேற்று என்னிடம் பத்தரை மணிக்கு கூட்டம் என்று தானே சொன்னார்கள். 9 மணிக்கு மாற்றிய செய்தி எனக்கு தெரியாதே, சரி சரி வண்டியை எடுக்க சொல்லு என்று வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தார்.

நேருஜியையும், மற்றவர்களையும் வீணாக  காக்க வைத்து விட்டோமே. தன்னைப் பற்றி நேரு என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற கவலையும், வேதனையும் காமராஜ் பேச்சில் வெளிப்பட்டன.

வாசலில் மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.  காருக்குள் ஏறி உட்காருவதற்குள்ளாகவே தெப்பலாக மூழ்கிவிடக்கூடிய பேய் மழை.  ராஜகோபாலன் சட்டென்று குடையைக் கொண்டு வந்து காமராஜரைக் காரில் ஏற்றி விட்டார்.

எனக்கும், நடராஜனுக்கும் ஒன்றும் புரியவில்லை.  காமராஜுடன் போக வேண்டியதுதானா  இல்லையா என்பதை யோசிக்காமலேயே நாங்களும் காரில் ஏறிவிட்டோம்.  காமராஜ் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவர் நினைப்பெல்லாம் தீன்மூர்த்தி பவனிலேயே  இருந்தது.

மழையில் டில்லிப் பாதைகளெல்லாம் மூழ்கிப் போயிருந்தன.  பத்தடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்குப் புலனாகவில்லை.

கார் போய்க் கொண்டிருந்தது.  கண்ணாடி கதவுகளையெல்லாம் மூடிக் கொண்டோம்.  நடராஜன் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். நானும், காமராஜும் பின் சீட்டில் இருந்தோம்.  ஒரே மௌனம்.

ஏற்கெனவே கூட்டத்துக்கு லேட்டாகப் போகிறோமே என்ற வேதனை காமராஜின் உள்ளத்தில் குழம்பிக் கொண்டிருந்தது.  இந்த சமயத்தில் அவருடைய அனுமதியின்றி நானும், நடராஜனும் வண்டியில்  ஏறிக் கொண்டது அவருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டது.  நடராஜனும், நானும் அந்தக் கூட்டத்துக்குப் போவது கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத காரியம். இங்கிதம் தெரியாமல் நாங்கள் வண்டிக்குள் ஏறிவிட்டோம்.  கொட்டுகிற மழையில் எங்களை நடுரோட்டில் இறக்கவும் அவருக்கு மனமில்லை.  நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாத நிலை.  இதுதான் அவருக்கு கோபம். திடீரென்று இடி முழக்கம் போல் காமராஜ் நடராஜனைப் பார்த்துக் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார். 

உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? இப்போது எதற்கு காரில் ஏறினாய்? கேமராவும் கையுமாக நீ என்னோடு அங்கே வந்தால் அங்குள்ளவர்கள் என்னைப்  பற்றி என்ன நினைப்பார்கள்?

நாங்கள் நடு நடுங்கி போனோம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜரை இப்படி ஒரு நிலையில் வைத்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டேன்.  கார் போய்க் கொண்டே இருந்தது.  சட்டென்று காமராஜ் அதோ அதோ நிறுத்து என்றார்.  அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது.  எங்களை கண  நேரத்தில் அங்கே இறக்கி விட்டு அந்த டாக்ஸியில் எறிக் கொள்ளும்படிச் சொன்னார்.   நாங்கள் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி அதில் ஏறிக் கொண்டோம்.  நடராஜனுக்கு  இது சகஜம் போலிருக்கிறது.  காமராஜர் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை.  அவர் என்னைத் திட்டினால் தான் எனக்கு திருப்தி.  அவரிடம் திட்டு வாங்குவதில் உள்ள சந்தோசம் எனக்கு வேறு எதிலும் இல்லை என்று ஜாக்பாட்டில் பணம் கிடைத்தவர் போல் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அன்று பகல் 12 மணிக்கு மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், காமராஜ் மூன்று பேருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கமிட்டீ கூட்டம் ஒன்று இருந்தது.  நானும், நடராஜனும் அங்கே போய்  காத்திருந்தோம். காமராஜ் அங்கே எங்களை பார்த்து விட்டு சிரித்து கொண்டே என்ன இங்கே வந்திருக்கிறீர்களா சரி இங்கேயே உட்கார்ந்திருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று ரொம்ப சாந்தமாக சொல்லிவிட்டு போனார். 

இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிமலையாக வெடித்த காமராஜர் இப்போது இப்படி பச்சை வாழைப்பட்டையாக மாறியிருக்கிறார் என்று வியந்தேன் நான். 

நேருஜியிடம் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் எவ்வளவு அழுத்தமானது ஆழமானது என்பதை நான் அன்றுதான் புரிந்து கொண்டேன். 

அன்று பகல் சாப்பாட்டின் போது தம்முடைய தர்ம சங்கடமான நிலையை அவர் எங்களுக்கு விளக்கியபோது தான் காரில் நாங்கள் இருவரும் ஏறிக் கொண்டது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தது.

7 ஆண்டுக்கு பிறகு அவரை இப்போது மீண்டும் திருமலைப் பிள்ளை ரோடில் உள்ள இல்லத்தில் சந்தித்தேன். 

என்ன வாங்க என்ன சங்கதி? சொல்லுங்க என்றார்.

தாங்கள் சுயசரிதை எழுத வேண்டும் என்றேன்.

வேண்டாம். அது எதுக்கு என்று மொட்டையாக பதில்  சொல்லி மறுத்துவிட்டார்.

தங்கள் சுயசரிதை என்றால் அதில் தமிழ் நாட்டின் சரித்திரம் இருக்கும், காங்கிரசின் சரித்திரம் இருக்கும் என்று வாதாடி வற்புறுத்தினேன். வேண்டுமானால் நீங்கள் பயாக்ரபியா எழுதுங்க எனக்கு ஆட்சேபமில்லை என்றார்.

நான் எழுத்துவதானால் தங்களுடைய உதவி இல்லாமல் முடியாது. எனக்குப் பல தகவல்கள் தேவைப்படும்.  தங்களை அடிக்கடி வந்து தொந்திரவு செய்வேன் என்றேன்.  வாங்க வாங்க என்றார். சொல்றீங்களா என்றது கேட்டேன்.  சொல்றேண்ணேன் என்று கூறி விட்டு டில்லிக்குப் புறப்பட்டுப் போனார்.

நான் விடவில்லை, டில்லிக்குப் போய்  அவரைப் பிடித்துக் கொண்டேன். அங்கே தினமும் பார்லிமெண்டுக்குப் போகவும், நிஜலிங்கப்பாவுடன் பேசவும் அவருக்கு நேரம் சரியாக இருந்தது,  இதற்கிடையில் விசிட்டர்கள் வேறு. இவ்வளவுக்கும் இடையில் எனக்கும் நேரத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

புவனேசுவர் காங்கிரஸுக்கு பிறகு சில நாட்களுக்கெல்லாம் நேரு காலமாகி விட்டாரே, அதற்கு முன்னாள் நேருஜியை தாங்கள் சந்தித்துப் பேசினீர்களா நேரு தங்களிடம் அப்போது ஏதாவது சொன்னாரா என்று என் முதல் கேள்வியை தொடங்கினேன்.

புவனேஸ்வருக்கு நேருஜி வந்திருந்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. சீன ஆக்கிரமிப்புக்கு பிறகே அவர் உடல் நிலையில் தளர்ச்சி கண்டிருந்தது.  நேருஜி புவனேசுவருக்கு வந்திருந்த போதிலும் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நேருஜி வராமல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு அதுதான்.  மாநாட்டுப் பந்தலில் அவருக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் காலியாக இருந்ததால் மாநாட்டில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்துங்கூடப் பந்தல் முழுதும் வெறிச்சோடிக் கிடப்பது போலவே தோன்றியது.  அப்புறம் அவரால் விமான கூடத்துக்கு காரில் போவது கூடச் சிரமமாகி விட்டது.  அதனால் ஏர்போர்ட்டுக்கு ஹெலிகாப்டரில் போய் அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் பயணமானார்.  அதற்குப் பிறகு நானும், சாஸ்திரியும் விசாகப்பட்டணத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போயிருந்தோம்.  அங்கிருந்து சாஸ்திரி டில்லி போய் விட்டார்.  நான் சென்னைக்கு திரும்பி விட்டேன். 

அப்புறம் சில நாட்களுக்கெல்லாம் நேரு என்னை கூப்பிட்டு அனுப்பினார்.  மந்திரி பதவியில் இருந்து விலகியிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மீண்டும் காபினெட்டில் எடுத்துக் கொள்வது பற்றி என்னை கலந்து ஆலோசித்தார்.  அப்போது வேறு சில மந்திரிகளும் விலகி இருந்ததால் சாஸ்திரியை மட்டும் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிலருக்கு ஆட்சேபம் இருந்தது.  நான் அச்சமயம் இந்திரா காந்தியின் பெயரைப் பிரஸ்தாபித்தேன்.

இந்திராவைப் பற்றி பினனால் பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டார் நேரு.

அப்போது அவர் சொன்னது என் மனத்திலே இருந்துகொண்டிருந்தது. தமக்குப் பிறகு ஒரு வேளை இந்திரா மந்திரியாக வரட்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் இருந்திருக்குமோ என்னவோ?  அப்படி அவர் வெளிப்படையாகவும் சொல்லவில்லை.  நானாகவே ஊகித்துக் கொண்டேன்.

நேரு இறக்கும்போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்? கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தீர்களா ?

இல்லை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று டில்லியில் இருந்து சாஸ்திரி கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.  எழுந்து போயிப் பேசினேன்.  நேருவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே புறப்பட்டு வருபடி சாஸ்திரி என்னிடம் சொன்னார்.  நான் அடுத்த விமானத்தில் உடனே டில்லி பறந்தேன். போகும்போது விமானத்திலேயே பகல் 2 மணிக்கு நேரு இறந்து விட்டார் என்று செய்தி சொன்னார்கள்.  நான் டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பே பிரசிடெண்ட் ராதாகிருஷ்ணன் நந்தாவைத் தாற்காலிகாப் பிரதமராக நியமித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.  ஜே. ராஜகோபாலனும், வேறு சில நண்பர்களும் எனக்காக விமான கூடத்தில் காத்திருந்தார்கள். 

அப்போது என்னைப் பலர் அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  நேருஜியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை நான் யாரிடமும் பேசவில்லை. பிறகு எல்லோரையும் தனித்தனியே அழைத்து பேசினேன்.  என் மனதில் சாஸ்திரியே பிரதமராக வரலாம் என்று இருந்த போதிலும் அந்த அபிப்பிராயத்தை நான் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.  தாம் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணம் மொரார்ஜி தேசாய்க்கு இருந்தது.  அவரிடமும் நான் பேசினேன்.  எல்லோரும் சாஸ்திரியைத்தான் போட வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆகையால் நீங்கள் போட்டி போடாமல் இருப்பது நல்லது என்றேன்.  அவர், இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு என் பேச்சை ஒப்புக் கொண்டுவிட்டார். அதனால் சாஸ்திரியையே எல்லோரும் ஏகமனதாக தேர்ந்தெடுப்பது சுலபமாயிற்று.

பார்லிமென்டரி காங்கிரஸ் கட்ச்சிக்குத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது நான் எழுந்து பேசினேன். அன்று ஜூன் மாதம் 2ம் தேதி பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடைபெற்றது.  பார்லிமென்ட் மெம்பர்கள், முதல் அமைச்சர்கள் தவிர வெளிநாட்டுப் பிரமுகர்களும் தூதவர்களுங்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்தார்கள்.  அவர்கள் விசிட்டர் காலரியில் உட்கார்ந்து இருந்தார்கள்.

நேருஜியை போன்ற ஒரு தலைவர் இனிக் கிடப்பது அசாத்தியம்.  இனி தனிப்பட்ட முறையில் யாரும் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கவும் முடியாது.  கூட்டாகப் பொறுப்பேற்று, கூட்டுத்தலைமையின் கீழ் கூட்டாக அணுகித்தான் இந்தக் கஷ்டமான பணியை மேற்கொள்ள முடியும்.  கடந்த காலத்தில் நாம் பல தவறுகள் செய்து இருக்கிறோம்.  நேருஜி நமது மாபெரும் தலைவராயிருந்ததால், அவரிடம் இருந்த நம்பிக்கை காரணமாக மக்கள் நம்மை மன்னித்தார்கள்.  இனி நாம் சிறிய தவறுகள் செய்தாலும் மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றேன்.

சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியை பிரதமாராக்கியதும் தாங்கள் தானே என்று கேட்டேன்.  ஆமாம், நேருவின் மகளாயிற்றே, தப்பாக நடக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டு விட்டேன்.  அது ஒரு கதை, அப்புறம் சொல்கிறேன் என்றார். 

(தொடரும்) 


Tuesday, May 17, 2022

காணாமல் போகும் உறவுகள்.

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை.

இருபது வருடங்கள் முன்னாடி அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை.

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம் என்று வாழ்ந்த போது அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை.

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது. அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை.

என்னங்க ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை.

உனக்கென்னப்பா, பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்..!!!அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

இப்போதுதான் இறந்தாராம் என்கிறார்கள்.

எப்படி நான் நம்புவது ??

நீங்கள் செல்லும் வழியில்இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்.

இல்லையேல்

உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல வாழ வைப்பதும் தான் 

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை... மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்... ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை.

பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது.

எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்... காரணம்., நகரவாழ் பெரியோர்கள் கூறுவது போல இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும் ?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள் ? ஒவ்வொரு பெண்ணும், சொந்த பந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப் பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை.

அந்த குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக் குடித்தனமோ சென்று விட்டால் ?

வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த  குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்.

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலை தான். 

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப் போகிறார்கள் ? வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன்  உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா ? இவ்வளவு பாடு பட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள் ?

ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்.

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த உண்மை‌‌ இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியவில்லை, தெரிந்தாலும் புரிவதில்லை.

இதன் தாக்கம் இனி வரும் பல தலைமுறைகளை மிகவும் பயங்கரமாக பாதிக்கும் என்பதுதான் யதார்த்தம்.

யாராலும் மாற்ற இயலாத காலத்தின் கட்டாயம்.

Thursday, May 05, 2022

மேரேஜ் மேட்சிங் சென்டர்

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த அதிர்ச்சி செய்தி..

இவரது மேரேஜ் சென்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்து இருக்கிறார். 

அவர் கூறுகிறார்:

சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன்.

பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா?

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா..

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. 

அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். 

அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணுமாம், காஃபி போடணுமாம்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றதும் எங்களுக்கும் நியாயமா(!)படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.

பேசிப் பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை)

என்ன விசயம் என்ற கேட்ட போது, நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். 

இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். 

எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை "காம்ப்ரமைஸ்" நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.

அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்குற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். 

அவளுக்கு காஃபி கலக்க கூடத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. 

அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக திரும்ப கேட்கிறார்கள். 

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட...

பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். 

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.

‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.

அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்...

தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க  கூடாது என்று நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை.

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது...

‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...

இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்..

அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது. 

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க...

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்!