Pages

Sunday, August 14, 2022

ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்

அன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ர அபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2 வரை  பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணஸ்வாமி அய்யர்.  பெரியவா பக்தர்.

மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார்.  புருவத்தை உயர்த்தி பெரியவா "என்ன விஷயம்?"என்றார். மிராசுதார் பவ்யமாக, தேங்கா, பழம், வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"

"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்."

பெரியவா தட்டை பார்த்தா.. "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"

"இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)

"லோக க்ஷேமத்துக்கு தானே?"

"அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே. வெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேகபிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ...."  நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. - பெரியவா கண்ணைமூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.

"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே ? "

"பதினொன்னு பெரியவா"

"யாராரு,  எங்கேருந்தேல்லாம் வந்தா?”

பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.

தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார் படித்தார் 

"திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்......" பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்கள் ஆச்சே... உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?"

மிராசுதார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும் வந்தார்.

"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி. வயசு அதிகமிருக்குமே இப்போ கஷ்டப் பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்ல முடியறதாமே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :” 

" ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்ல வேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று தோணித்து""

" உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதை வேணுமானாலும் சொல்லாதே. 

தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பததி உனக்கு தெரியுமா ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ?? பெரியவா கண் மூடிக்கொண்டது : 

" நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கரத்துக்கு மட்டும் பதில் சொல்லு? 

கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும் போது " வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்றுஅவரிடம் போய் கேட்டாயா?" 

அங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டு கொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில் பிரவாகத்தோடு "தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை தத்ரூபமாக சொல்றேள் "

"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?

எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி " தலா பத்து ரூபா கொடுத்தேன்" 

“தெரியும். எல்லாருக்குமேவா? " மென்று முழுங்கிக் கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த மிராச்தாரிடம் பெரியவா "எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன்.

எல்லாருக்கும் பத்து பத்துரூபா கொடுதுண்டே வந்து கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில் உனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை வாங்கிண்டா அப்படி தானே ??"

நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல் துடித்தார். "பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்"என்று வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. 

மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது. பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது கட்டி போட்டது

"அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீதானே சக்கரை பொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார் : 

"நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர் மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே"". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப துக்கம் மேலிட்டது. நா தழு தழுத்தழுத்தது..

நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.

அமைதி பதினைந்து நிமிடம். 

பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். " தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை.  அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம் பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம்."

மகாபெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். 

கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதிமகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு அதில் இஷ்டமில்லை என்று. 

இவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு அடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம்.அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிக்ஞை பண்றேன். இனிமே இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டுமில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த கை தொடாது.”     கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.

நாராயணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை ஒத்துகொள்வாரா?"" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.

மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை காப்பாத்தனும்”  என்று பெரியவா காலடியில்விழுந்தார். அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவில்லை. "

பெரியவா  “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்" என்றார். 

எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65வயது மதிக்க தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார். "என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன்.   நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போகவந்தேன்" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷைவாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். " 

பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவாதான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினா" என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.  

நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். 

தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்." " பெரியவா, நான் இப்பவே ஓடறேன். "அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?" நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். " உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்"என்று கூறிவிட்டு உளளே சென்று விட்டார். வெகு நேரமாகியும் பெரியவா வெளியே வரவில்லை. 

மிராசுதார்  ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம். 

அன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் எனறு கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார்.

கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை பிடித்து என்னை மனனிச்சுடுங்கோ நான் மகாபாவி. எனறு கதறினார். 

"சுரீர்" என்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால் என்று சொன்னாரா?

(சர்மா சாஸ்திரிகள்)

Sunday, August 07, 2022

வாகன விபத்து நிதி நிவாரணம்

வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது:

337 இ.த.ச (ரூ 25000),

338 இ.த.ச (ரூ 50000),

304(அ) இ.த.ச (100000),

பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.

ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ, கொடுங்காயமோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவவதில்லை 

எனவே, 337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் ,காயச்சான்று , பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை ,மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested உடன் இவை அனைத்திலும் தலா இரண்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட நபர் அரசு வழங்கும் நிவாரண நிதியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு உதவி ஆய்வாளருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும் இவை அனைத்தையும் விக்டிம் பன்டு ( victim fund) மனுவுடன் இணைத்து உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்ற உடன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் பின்பு அங்கிருந்து உடனடியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு  அனுப்பி வைக்கப்படும் பின்  உடனடியாக கோட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நபரை நேரில் அழைத்து பண உதவி வழங்குவார்.

தயவு செய்து இந்த தகவலை அதிகம் பகிரவும். கண்ணுக்குத் தெரியாத குடும்பத்திற்கு உதவ நம்மாலும் முடியும்.

மனு வழங்க காலக்கெடு இல்லை.