Pages

Tuesday, March 31, 2026

ராமரின் பரம்பரை ~ லாஹூர்

லவ மற்றும் குசா இறந்த பிறகு ராமரின் பரம்பரைக்கு என்ன நேர்ந்தது?

ஸ்ரீ ராமர் 11,000ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக கீழ்க்கண்ட சுலோகம் கூறுகிறது.

"சததஸ து சஹஸ்த்ராணி ராமே ராஜ்யதி".

ஸ்ரீ ராமருக்கு பிறகு அவரது கோசல நாடு பல பாகங்களாக பிரிக்கப்பட்டு லவன் குசன் மற்றும் லட்சுமண பரத சத்ருகனர்களின் மகன்களுக்கும் தரப்பட்டது.

லவன் ஷ்ரவஸ்தி / தற்போது லாஹூர் என்று அழைக்கப்படும் லவ்புரி எனும் நகரை தலைநகராக கொண்டு அவனது பகுதியை அரசாண்டார்.

குசன் அயோத்தியை தலைநகராகக் கொண்டு அரசாண்டார். பின்னர் தற்போது குஷிநகர் என அழைக்கப்படும் குஷாவதியை புதிய தலைநகராகக் கொண்டு அரசாண்டார்.

இதன் காரணமாக ராமனுக்கு அடுத்து குசனது பெயர் தான் ராம பரம்பரையில் வருகிறது. அவருக்கு பின் அவரது மகன் அதிதி அவரது மகன் நிசாதன் என ராம பரம்பரை நீளுகிறது.

(குசன் மட்டுமே ராம சீதையின் மகன் என சில பேச்சுவழக்கு கற்பனைக் கதைகள் உண்டு. வனத்திற்கு சென்ற கர்ப்பிணியான சீதை வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார் அங்கே அவருக்கு குழந்தை பிறந்தது, பின்னர் வால்மீகி முனிவர் தவம் செய்யும் போது இடையூறாக இருக்கக்கூடாது என தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் குழந்தையையும் சீதை ஆற்றங்கரைக்கு எடுத்து செல்கிறாள். விழித்த முனிவரோ குழந்தையை காணாமல் சீதைக்கு என்ன பதில் சொல்வது என எண்ணி தர்ப்பை கொண்டு குழந்தையை உருவாக்குகிறார். திரும்பி வந்த சீதை அக்குழந்தையையும் தன்னுடையதாய் எண்ணி வளர்க்கிறாள். பின்னாளில் சீதை நிலத்தில் உறைந்த பிறகு லவனும் குசனும் புனித நெருப்பினை வலம் வருகின்றனர். லவன் நெருப்பில் மறைந்து விட நிலைத்து நின்ற குசனுக்கு ராஜ்ஜியம் வழங்கப்பட்டதாக கதை உண்டு. ஆனால் மூல ராமாயணத்தில் இவ்வாறு இல்லை.இது வெறும் செவிவழிக் கதையாகும்)

ரகு வம்சத்தில் மொத்தம் 146 அரசர்கள், அதில் முதல் அரசன் சூரியனின் மகனான மனு ஆவார் எனவேதான் அவ்வம்சம் சூரியவம்சம் அல்லது ரகுவம்சம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ ராமர் அவ்வம்சத்தின் 81வது அரசர், குசன் 82வது அரசர்.

குசனுக்கு பிறகு 64 தலைமுறைகள் அரசாண்டனர். லங்குல் அல்லது சித்தார்த் என அறியப்படும் கௌதமபுத்தர் சூரியவம்சத்தின் 141வது அரசராவார் (BCE 563-483). அவரது மகன் ராகுல் / ப்ரசஞ்சித் அவருக்கு அடுத்த அரசன் ஆவார்.

லங்குல் மற்றும் அவரது மகன் ப்ரசஞ்சித் ஆகியவர்கள் புத்தர், ராகுல் இல்லை வேறு ஆட்கள் என்ற கருத்தும் உள்ளது. எனவே ராம வம்சத்தில் புத்தர், ராகுல் பெயர்களுக்கு பதிலாக லங்குல், ப்ரசஞ்சித் ஆகிய பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. (புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரமாக வட நாட்டில் வணங்குவர் ஆனால் தென்னாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை)

ராமனுடைய வம்சத்தின் கடைசி அரசர் சௌமித்ரன் / சுமித்ரன் ஆவார். கிமு 362ல் சுமித்ரனை மகாபத்மநந்தன் வென்ற பிறகு உலகின் மிகப்பெரிய அந்த அரச வம்சம் முடிவுற்றது.

Friday, March 20, 2026

தஞ்சாவூர் சங்கரன்

கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை.....

பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி" என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க. "அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக விடுவாங்களா.. பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.. பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர்காரிலிருந்து கீழே இறங்கினார்.

இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன். உள்ளே இருக்கிறது என் மனைவி. தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி. அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும். இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?


"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் பண்ணணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு வாயார வாழ்த்தினார்கள் அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால் தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை. "நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன். ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்குஅடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். நண்பர் பக்கத்துல இருக்கார். அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன். காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள், கல்கண்டு, புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல வேண்டும் என்ற அவாவில். ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு, 

"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார். பின் தொடர்ந்தனர் தம்பதிகள் ."வாப்பா சதாசிவம்.. கும்பகோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா.. அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..." "அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு "சங்கரன்னு ஒருத்தர்..அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.அவருக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றார் குழைவாக."மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"என்று பெரும்குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்த பரப்பிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது. "பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...கலையில்தானே நான் வந்திருக்கேன்" சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ" என்று சொல்லிவிட்டுப் போனார். சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார், "பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்..... பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம் கூடவே அவரது மனைவியும்..