Pages

Friday, June 17, 2022

சிவகாமியின் செல்வன் 05

நீங்கள் 1940ல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று.  அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய்தீர்கள்.  எப்போது கைது செய்யப்பட்டீர்கள்  என்று காமராஜைக் கேட்டேன்.  

நான் சத்தியாகிரகம் செய்யவில்லை.  அதற்குள்ளாகவே போலீசார் என்னை பாதுகாப்புக்கு கைதியாகக் கைது செய்து சிறைக்குள் கொண்டு போய்விட்டார்கள்.  காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது நிபந்தனை.  எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்கள் லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்  கொண்டிருந்தேன்.  என்னுடன் நாகராஜனும் வந்து கொண்டிருந்தார்.  

எந்த நாகராஜன்.  அந்தக் காலத்தில் நாகராஜன் எனபர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும் சொல்வார்களே அந்த நாகராஜனா ?

அதெல்லாம் சும்மா பேச்சு.  என்னோடு அவர் எப்போது சுற்றிக் கொண்டிருப்பார்.  அவரை முதல் முதல் இந்தியா பத்திரிக்கை ஆபீஸிலோ அல்லது வேறு எங்கேயோ சந்த்தித்தேன்.  அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன்.  அதனால் நானும் அவரும் சில விஷயங்ககளை சேர்ந்து ஆலோசிப்பதும் உண்டு.  அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடையல் பேச்சை கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா என்ன என்றார் காமராஜ். 

தங்களை எதற்கு பந்தோபஸ்து கைதியாக்கி வேலூர் சிறைக்கு கொண்டு போனார்கள். அதுவா, அப்ப மெட்றாஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான்.  யுத்த நிதிக்கு பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துக்கிட்டிருந்தான்.  நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராய் போய் யுத்த நிதிக்கு பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன்.  அதனாலே ஹோப்புக்கு பணம் வசூலாகால்லே.  இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு.  காரணம் தெரிஞ்சதும் என்னைப் பாதுகாப்பு கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான். 

ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ண சொன்னார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.

அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார்.  நல்ல மனுஷன்.  தேச பக்தி உள்ளவர்.  தேச பக்தர்களுக்கு எல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார்.  அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சுப்பரின்டெண்ட்டாக மாத்திட்டாங்க.  போற வழியிலே அவர் விருதுநகரில் இறங்கி என் வீட்டுக்குப் போய் என் தாயாரை பார்த்து பேசிவிட்டு அம்மா என்னையும் உங்க மகன்னு நினச்சுக்குங்கம்மான்னு சொல்லிட்டு போனாராம்.  அப்புறந்தான் எனக்கு இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சுது.

ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி, சத்தியாக்கிரகம் செய்யணும்னு உங்ககிட்ட வந்தாரா?

ஆமாம், வந்தார். நல்லா நினைவு இருக்கு.  வாசன் கூட அவருக்கு சத்தியாக்கிரகம் செய்யப் பெர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக நினைவு.   கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

நல்ல எழுத்தாளர். அந்த காலத்திலேயே திரு வி. கல்யாணசுந்தர முதலியார் நவசக்தின்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார்.  அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன்.  தேனியோ, தமிழ்த் தேனியோ - ஏதோ ஒரு பேர்லே எழுதுவார்.  ரொம்ப தெளிவா, வேடிக்கையா எழுதுவாக.  ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையெங்கமெல்லாம் காங்கிரசுக்கு பெரிய பலம் தேடிக் கொடுத்தது.  ஏ.என்.சிவராமன் கூட என்னோட ஜெயிலிலே இருந்தவர் தான்.  1930ல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ணசாமி, வெங்கட்ராமன் எல்லோரும் ஒருபக்கம்.  லாகூர் வழக்கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம்.  சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார்.  பாமரர்களை விட படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க.  சொக்கலிங்கமும், கல்கியும் பாமரர்களுக்கு புரியும்படி எழுதுவாங்க.

பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா என்று தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே.  அப்பா கல்கி தங்களை ரொம்ப தாக்கி எழுதினார், அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினால் அப்படி எழுதினாருங்கிறதை விட, ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினாருங்கறதுதான் என் அபிப்பிராயம்.  எப்படி எழுதினாலும் ரொம்ப தெளிவான எழுத்து.  காங்கிரசை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க.

இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்கும் இடத்தில் தான் அப்பா காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது.  அது 30 வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு.  அப்பா காங்கிரஸ் கட்டடட நிதிக்கு பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் 10,000/- ரூபாய் கொடுத்தார்.  மொத்தம் 67,000/- ரூபாய் சேர்த்து வச்சிருந்தேன்.  தேனாம்பேட்டையில் இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட், இந்து சீனிவாசனுக்கு  சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங்கிரசில் ரொம்ப  பற்றுதல்.  அது 10 ஏக்கர் நிலம்.  அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்க்ஷனில் எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்கு கொடுத்துடுறேன்னு சொன்னார்.  ஆனால் அதை வாங்குவதற்கு 15,000/- குறைஞ்சது. வாசனை போய் பார்த்து விஷ;யத்தை சொல்லி 15,000/- கடனாக கேட்டேன்.  காதும் காதும் வெச்சாப்பல உடனே  ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்டுட்டார்.  அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த கடனை திருப்பி கொடுத்துட்டேன்.  

அவரை ஏன்  எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே.

அவரை நான் பல முறை கேட்டுக்கிட்டேன், அவர் பிடிவாதமா முடியாதுன்னுட்டார்.  கடைசியாக  வற்புறுத்தி, ராஜ்ய சபாவுக்கு போட்டோம்.

பாதுகாப்பு கைதியா எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க.

நவம்பர் 1949ல் வெளியில் வந்துட்டேன்.  மொத்தம் எத்தனை மாசம்னு கவனத்தில் இல்லே. 

உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுத்தது அப்பதானே ?. 

ஆமாம், நான் ஜெயிலில் இருந்து வந்ததும் விருதுநகர் போனேன்.  நான் ஜெயில்லே இருந்தபோது என்னை சேர்மனாக தேர்ந்தெடுத்துட்டாங்க.  நான் போனதும் என்னை கூப்பிட்டு சேர்மன் நாற்காலியில் உட்கார சொன்னாங்க.  நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு சேர்மன் பதவி எனக்கு வேண்டாம் பார்ட்டி வேலை, கெட்டுப் போய்விடும்.  சேர்மன் வேலை சரியாக செய்ய முடியாது.  எப்பவுமே கட்சி வேலை செய்வதில் தான் பிரியம்.  இந்த கவுரவத்தை எனக்கு கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றின்னு சொல்லி ராஜினாமா எழுதிக் கொடுத்துட்டு எழுத்து வந்துட்டேன்.  

ஒரு நாள் கூட பதவியில் இல்லையா?

கொஞ்ச நேரம் தான் இருந்தேன்.  எனக்கு பார்ட்டி முக்கியமா பதவி முக்கியமா?

சத்தியமூர்த்தி உங்களோடு சிறையில் இருந்தாரா?

அம்ரோட்டி ஜெயில்லே இருந்தார்.  ஆகஸ்ட் 1942 போராட்டத்தில் அவரை கைது பண்ணி அமராவதிக்கு கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திருவண்ணாமலை அண்ணாமலைப்பிள்ளை எல்லோரும் அங்கே போனோம்.  சத்தியமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.  அவரைப் பார்க்கணும்னா ஜெயில்லே விடமாட்டாங்க.  அதுக்காக ஏதாவது ஒரு வியாதியை சொல்லிக்கிட்டு அங்கேய் போய்  வருவோம்.  என்ன செய்யறது.  ஏதோ சொல்லிட்டு போய்  சத்தியமூர்த்தியை பார்த்துட்டு வருவோம்.  அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுக் கிடந்தார்.  வெய்யில் தாங்காது.  ரொம்ப  கடுமை. மண்டை வெடிச்சிடும் போல இருக்கும்.  நானும் அண்ணாமலையும் தொட்டியில் நீரை நிரப்பி தொட்டியிலேயே ராத்திரியெல்லாம் உட்கார்ந்திருப்போம்.  அண்ணாமலைப்பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்.

அவர் நல்ல பாடுவாரா?

சுமாராப்பாடுவார்.  ஏதாவது லாவணி கீவாணி பாடிக்கிட்டிருப்பார், நான் கேட்டுக்கிட்டுருப்பேன்.  என்ன செய்யறது.  ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?

பாவம், சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா என்று எண்ணிக்கொண்டேன் நான்.  

(தொடரும்)



















Tuesday, June 07, 2022

சிவகாமியின் செல்வன் 04

திரு சத்தியமூர்த்தி 1936ல் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராயிருந்த போது  அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றினார்.  நேருஜி, தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.  காமராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போதுதான்.

அதற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய்விட்டது.  ராஜாஜியே பக்க பலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடியவில்லை.  காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி இதை நன்றாகக் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்கு தாம் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு 1940ல் காமராஜரைப் போட்டியிட செய்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன.  காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்ள முத்துரங்க முதலியார், அவினாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் கண்டு பேசினார்கள்.  அவர்களிடம்  ராஜாஜி தம் கருத்து என்ன என்பதை சொல்லவில்லை.  பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வர முடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ?  தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது  சி.பி. சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே என்று யோசனையை வெளியிட்டார் ராஜாஜி.  அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார், அதற்கு ராஜாஜி என்ன  பதில் கூறினார் என்பது நமக்கு தெரியவில்லை.  ஆனால் ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவை தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி. 

இதற்குள் காமராஜும் அவரை சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார்.  அவர் காமராஜை அழைத்து, சுப்பையாவை போடும்படி ராஜாஜி சொல்கிறார், நானும் சரி என்று சொல்லிட்டு வந்துவிட்டேன், நீ என்ன சொல்கிறார் என்று கேட்டார்.

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு அவர் நிற்பதில் இஷ்டமில்லை.  சுப்பையாவுக்குப் பதில் வேறு யார் நின்றாலும் எனக்கு சம்மதம்தான், இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன் என்று பிடிவாதமாக சொன்னார் காமராஜ்.

சாத்தியமூர்த்தியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.  சரி உன் இஷ்டப்படியே செய் என்று சொல்லிவிட்டார்.  எனவே காமராஜரும், அவருக்கு எதிராக சி.பி. சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று.  போட்டியில் காமராஜுக்கு 103 வோட்டுக்களும், சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும் கிடைத்தன.  காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்றார்.  காமராஜுக்கு காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த வருடம் தான்.

1919ல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரண தொண்டனாக விருதுநகரில் இருந்து புறப்பட்ட காமராஜ் 20 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவராக வந்தது, காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை.  நியாயம், நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது.  நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.

ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்தபோது டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்கு காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம்முடைய கம்யூனிஸட் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார்.   அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜமன்னார் அவர்களும் மோகன் குமார மங்களத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்கு சிபாரிசுக்கு குறிப்புடன் ⁂பைலை அனுப்பி வைத்தார்.  காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள் தான்.  ஆனாலும் தாம் இந்த சிபாரிசை ஏற்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம்.  அத்துடன் குமாரமங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஒரு கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவவிட்டார்.  இந்த நிலைமையில் தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை.  தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.  அப்போது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார்.  குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான  ⁂பைல் பென்ஹத்திடம் போயிற்று.  பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும்.  ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்து சொல்வதற்கு முன்னாள் பந்த் காமராஜை நேரில் சந்த்தித்துப் பேச விரும்பினார்.  அப்பொழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.  

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை.  நியாயம் கெட்டுப் போகும் என்று தம் கருத்தை எடுத்து சொன்னார் காமராஜ்.  பந்த்துக்கும் அது சரியாகவேப்பட்டது.  இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜரைப் பார்த்து[ பேசினார்.  காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுதது சொன்னார்.

சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது. அட்வொகேட் ஜெனரலாகப் போடுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மேலிடத்தில் கேட்டபோது எனக்கு அதில் ஆட்சேபமில்லை என்றார் காமராஜ்.  
அட்வகேட் ஜெனெரலாக வந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா என்று திருப்பிக் கேட்டார்கள்.  
சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லாமே அட்வொகேட் ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டு என்பது கிடையாது.  வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம்.  அந்த உரிமை சர்க்காரிடம் தானே இருக்கிறது.  எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிக் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே என்றார் காமராஜ்.   

மோகன் குமாரமங்கலம் நீதிபதியாக வருவதிலோ அல்லது அட்வொகேட் ஜெனெரலாகா வருவதிலோ காமராஜுக்கு சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது.  ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்கு பட்டதை நேரம் வந்தபோது அதை எடுத்து சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிறதல்லவா. 1940ல் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்கவிருந்தது.  அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக்கு கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்திருக்க வேண்டும்.  சில பெருந்தலைவர்களை அணுகி துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா என்று யோசனைக் கேட்டார்.  தாராளமாக ஒப்பு கொள்ளுங்கள் என்று சிலர் கூறினார்கள்.  காமரராஜ், இதை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார்.  இப்போது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்று கொள்வது எனக்கு சரியாக படவில்லை.  காரணம் இப்போது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி.  இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்த சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்கு பெருமை என்றார் காமராஜ்.  
இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையே என்றார் சத்தியமூர்த்தி.
இருக்கலாம்.  ஆனாலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே.  அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது.  அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்த துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது என்று கேட்டார் காமராஜ்.
இதற்குப் பிறகுதான் சத்திய மூர்த்தி அந்த பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.
காமராஜிடம் இதை பற்றி நான் விசாரித்தபோது, அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும்.  சத்தியமூர்த்தியை நினைத்து கொண்டு ஒரு முறை பலமாக சிரித்துவிட்டார் அவர்.  ஐயோ பாவம் சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்ணும் தெரியாது.  சின்னச் சின்ன பதவி என்றால் கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன், பதவின்னு வரப்போ அது மேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம்.  பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன் என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

(தொடரும்)