Pages

Tuesday, June 07, 2022

சிவகாமியின் செல்வன் 04

திரு சத்தியமூர்த்தி 1936ல் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராயிருந்த போது  அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றினார்.  நேருஜி, தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.  காமராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போதுதான்.

அதற்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய்விட்டது.  ராஜாஜியே பக்க பலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடியவில்லை.  காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி இதை நன்றாகக் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்கு தாம் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு 1940ல் காமராஜரைப் போட்டியிட செய்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன.  காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்ள முத்துரங்க முதலியார், அவினாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் கண்டு பேசினார்கள்.  அவர்களிடம்  ராஜாஜி தம் கருத்து என்ன என்பதை சொல்லவில்லை.  பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வர முடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ?  தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது  சி.பி. சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே என்று யோசனையை வெளியிட்டார் ராஜாஜி.  அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார், அதற்கு ராஜாஜி என்ன  பதில் கூறினார் என்பது நமக்கு தெரியவில்லை.  ஆனால் ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவை தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி. 

இதற்குள் காமராஜும் அவரை சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார்.  அவர் காமராஜை அழைத்து, சுப்பையாவை போடும்படி ராஜாஜி சொல்கிறார், நானும் சரி என்று சொல்லிட்டு வந்துவிட்டேன், நீ என்ன சொல்கிறார் என்று கேட்டார்.

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு அவர் நிற்பதில் இஷ்டமில்லை.  சுப்பையாவுக்குப் பதில் வேறு யார் நின்றாலும் எனக்கு சம்மதம்தான், இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன் என்று பிடிவாதமாக சொன்னார் காமராஜ்.

சாத்தியமூர்த்தியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.  சரி உன் இஷ்டப்படியே செய் என்று சொல்லிவிட்டார்.  எனவே காமராஜரும், அவருக்கு எதிராக சி.பி. சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று.  போட்டியில் காமராஜுக்கு 103 வோட்டுக்களும், சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும் கிடைத்தன.  காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்றார்.  காமராஜுக்கு காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த வருடம் தான்.

1919ல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரண தொண்டனாக விருதுநகரில் இருந்து புறப்பட்ட காமராஜ் 20 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவராக வந்தது, காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை.  நியாயம், நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது.  நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.

ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்தபோது டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்கு காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம்முடைய கம்யூனிஸட் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார்.   அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜமன்னார் அவர்களும் மோகன் குமார மங்களத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்கு சிபாரிசுக்கு குறிப்புடன் ⁂பைலை அனுப்பி வைத்தார்.  காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள் தான்.  ஆனாலும் தாம் இந்த சிபாரிசை ஏற்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம்.  அத்துடன் குமாரமங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஒரு கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவவிட்டார்.  இந்த நிலைமையில் தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை.  தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.  அப்போது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார்.  குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான  ⁂பைல் பென்ஹத்திடம் போயிற்று.  பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும்.  ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்து சொல்வதற்கு முன்னாள் பந்த் காமராஜை நேரில் சந்த்தித்துப் பேச விரும்பினார்.  அப்பொழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.  

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை.  நியாயம் கெட்டுப் போகும் என்று தம் கருத்தை எடுத்து சொன்னார் காமராஜ்.  பந்த்துக்கும் அது சரியாகவேப்பட்டது.  இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜரைப் பார்த்து[ பேசினார்.  காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுதது சொன்னார்.

சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது. அட்வொகேட் ஜெனரலாகப் போடுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மேலிடத்தில் கேட்டபோது எனக்கு அதில் ஆட்சேபமில்லை என்றார் காமராஜ்.  
அட்வகேட் ஜெனெரலாக வந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா என்று திருப்பிக் கேட்டார்கள்.  
சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லாமே அட்வொகேட் ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டு என்பது கிடையாது.  வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம்.  அந்த உரிமை சர்க்காரிடம் தானே இருக்கிறது.  எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிக் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே என்றார் காமராஜ்.   

மோகன் குமாரமங்கலம் நீதிபதியாக வருவதிலோ அல்லது அட்வொகேட் ஜெனெரலாகா வருவதிலோ காமராஜுக்கு சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது.  ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்கு பட்டதை நேரம் வந்தபோது அதை எடுத்து சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிறதல்லவா. 1940ல் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்கவிருந்தது.  அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக்கு கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்திருக்க வேண்டும்.  சில பெருந்தலைவர்களை அணுகி துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா என்று யோசனைக் கேட்டார்.  தாராளமாக ஒப்பு கொள்ளுங்கள் என்று சிலர் கூறினார்கள்.  காமரராஜ், இதை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார்.  இப்போது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்று கொள்வது எனக்கு சரியாக படவில்லை.  காரணம் இப்போது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி.  இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.  நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்த சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்கு பெருமை என்றார் காமராஜ்.  
இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையே என்றார் சத்தியமூர்த்தி.
இருக்கலாம்.  ஆனாலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே.  அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது.  அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்த துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது என்று கேட்டார் காமராஜ்.
இதற்குப் பிறகுதான் சத்திய மூர்த்தி அந்த பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.
காமராஜிடம் இதை பற்றி நான் விசாரித்தபோது, அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும்.  சத்தியமூர்த்தியை நினைத்து கொண்டு ஒரு முறை பலமாக சிரித்துவிட்டார் அவர்.  ஐயோ பாவம் சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்ணும் தெரியாது.  சின்னச் சின்ன பதவி என்றால் கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன், பதவின்னு வரப்போ அது மேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம்.  பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன் என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

(தொடரும்)




 
















 






































 
















No comments:

Post a Comment