Pages

Saturday, July 27, 2024

சாப்பாடு காஞ்சி பெரியவா

சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி பெரியவர் - அருமையான விளக்கம்.

கல்யாணம்,  மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம்?''  என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா  பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"

மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.    மௌனமாக இருந்தார்கள்.   தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று...

இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையான இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம், அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீராமனையும் தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நினைக்கனும் என்பதற்காகத்தான்... 

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு.  தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா  ஏதோ ஏதோ  இருக்குமே  அது தான் '' தான் '' என்பது இல்லையா.  நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம். அந்தத்  ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால்   ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.  அதாவது ''ரச'' மான மன நிலை. அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது. 

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர்.   மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?  

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. 

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது? 

நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும்  பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார்,

ஸ்ரீ மகா பெரியவா.

No comments:

Post a Comment