Pages

Saturday, February 19, 2022

வாழ்த்தட்டும் தலைமுறை

நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில், கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை, அண்ணா ! அம்மா 10 இட்லி வாங்கி வரச் சொன்னாங்க. காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றது.

ஹோட்டல் நடத்துபவர், ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு. அம்மாக்கிட்டே சொல்லுமா.

இப்போ வாங்கிட்டுப்போ. தூக்கு வாளியை தா, சாம்பார் ஊத்தி தாரேன் என்றார்.

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, சரி அம்மாட்ட சொல்றேன். போயிட்டு வரேன் அண்ணே என்றபடியே கிளம்பிவிட்டாள்.

அந்தக் கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டேன். நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க?

ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார். நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்.

அதெல்லாம் குடுத்துடுவாங்க.  என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?

குழந்தை பசியால் கேட்டிருக்கும். அதான் சார், அந்த  குழந்தையை அனுப்பி இருக்காங்க.

நான் கொடுத்தனுப்புவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும் சார்.  ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

நான் உணவு தரவில்லை என்றால் ,அந்தக் குழந்தை, தன் தாய்க்காக திருடப் போகும், அல்லது அந்தத் தாய், தன் குழந்தையின் பசிக்காக, தவறான பாதைக்கு செல்வாள்.

ஆனால், என்னால் நான் நஷ்டப்பட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்றார்.

மேலும் ஹோட்டல் முதலாளி கூறினார்.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

நான் கும்பகோணத்தில்,  என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கின்றது. 

புட்டு விற்கும் ஒரு பாட்டியிடம் இதே போல கடன் சொல்லி  அவ்வப்போது என் பசியை ஆற்றிக் கொள்வேன். அப்பொழுது அந்தப் பாட்டியிடம், ஏன் பாட்டி, நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய் என்று  கேட்டேன். 

அதற்கு அந்தப் பாட்டியும் அட போப்பா, நீ பணம் தந்தால் அது எனக்கு லாபக் கணக்கு.  பணம் தராமல் ஓடிப் போய் விட்டால் அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று  சொல்லி மெய்மறக்க சிரித்தார். 

இதுதான் இந்தியா இதுதான் நமது  நம்பிக்கை, பண்பாடு!

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி அன்னதானம் செய்வோம்.



No comments:

Post a Comment