Pages

Monday, January 19, 2026

Govinda Damodara Madhavedhi

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி. 

இது சுவாமிகள் எனக்கு 36 வருஷத்துக்கு முன்னாடி எழுதிக் கொடுத்த ஒரு நாம மந்திர உபதேசம். பில்வமங்களாச்சார்யார்னு ஒரு மகான் குருவாயூரப்பனுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தவர். அவர் கோவிந்த தாமோதர ஸ்தோத்திரம்னு ஒண்ணு பண்ணிருக்கார். அது சுவாமிகளுக்கு ரொம்ப இஷ்டமானது. அந்த ஸ்லோகத்தைப் பத்தி சுவாமிகள் பேசினதை நான் ஷேர் பண்றேன். அதுல இருந்து சிலது படிக்கிறேன்.

"சுகாவஸானே த்விதிதமேவ ஸாரம்" சுகத்தின் எல்லை நிலையில் நீ இருப்பாய், எதைச் சொன்னால்? "கோவிந்த தாமோதர மாதவேதி". கோவிந்தா, தாமோதரா, மாதவான்னு சொல்லிண்டு இருந்தா நீ அனுபவிக்கிற ஆனந்தம் பிரம்மாதி தேவதைகளுக்குக் கூட கிடையாது. அப்பேர்ப்பட்ட ஆனந்தம் நீ அனுபவிப்பாய்.

"துக்காவஸானே து இதமேவ கேயம்" கடுமையான துக்கம், அதை மறக்கவே முடியல. நினைக்க நினைக்கத் தேம்பித் தேம்பி அழணும்னு தோன்றுது, புலம்பணும்னு தோன்றுது. உடம்பும் வீணா போயிட்டு இருக்கு. யாராலயும் அதுக்கு மருந்து கொடுக்க முடியல. அப்பேர்ப்பட்ட துக்கம் ஒருத்தர் அனுபவிக்கிறார்னா, அவரைப் போய் நாடி, இப்படிப் புலம்புறதாலயும், அழுறதாலயும் இந்த துக்க நிவர்த்தி ஏற்படாதுப்பா. மகான் பில்வமங்களாச்சார்யார் சொல்லியிருக்கார் **"கோவிந்த தாமோதர மாதவேதி"**ன்னு விடாமத் தொடர்ந்து சொல்லிண்டு வா. இந்த துக்கம் பறந்து போயிடும். துக்கத்தினுடைய எல்லையிலிருந்துண்டு ஒருத்தர் கஷ்டப்படுறபோது அவாளுக்கு "கோவிந்த தாமோதர மாதவேதி"ன்னு அந்த திருநாமங்களைச் சொன்னால் பரம சாந்தி ஏற்படும்.

"தேஹாவஸானே து இதிதமேவ ஜாப்யம்" ஸ்ரீமத் பாகவதத்துலயும் ஸ்ரீமன் நாராயணீயத்துலயும் ‘மனஸைக் கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம். அதற்குச் சிறந்த உபாயம் என்ன? இந்த மனஸு அடங்க, மனஸு எங்க வேணாலும் போகட்டும், வாயில திருநாமத்தைப் பேத்தலாஜிக்கல் கண்டிஷன்ல (pathological condition) நம்மையறியாமல் வரக்கூடிய அளவுக்குப் பழகிக்கோ’ என்பதுதான் பாகவத உபதேசம், நாராயணீய உபதேசம். அப்படிச் சொல்லிட்டே இருந்தா, "தேஹாவஸானே த்விதிதமேவ ஜாப்யம்", சரீரம் கீழே விழும்போதும் நம்மையறியாமல் கோவிந்த தாமோதர மாதவேதி அப்படிங்கிற திருநாமம் வந்துடும். அந்த திருநாமம் வாக்குல வந்தவுடனே பகவான் கோலோகத்துக்கு அவனை அழைத்துக் கொண்டு போவார்.

அந்த ஸ்தோத்திரத்திலிருந்து இன்னொரு ஸ்லோகம்: 

"த்வாமேவ யாசே மம தேஹி ஜிஹ்வே

ஸமாகதே தண்டதரே க்ருதாந்தே |

வக்தவ்யமேவம் மதுரம் ஸுபக்த்யா 

கோவிந்த தாமோதர மாதவேதி ||

ஹே நாவே! நீ கேட்டபோது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், எத்தனையோ விஷயம், தயிர் வடை எல்லாம் உனக்குக் கொடுத்திருக்கேன். சில பேருக்குத் தித்திப்புப் பிடிக்காது, இந்த மாதிரி காரம் பிடிக்கும். அதனால நீ சொன்னபடி நடந்திருக்கேன் ஜென்ம ஜென்மமா. உன்கிட்ட ஒரு சின்ன ஒப்ளிகேஷன் (obligation). என்ன? எமன் கையில காலதண்டத்தோடு வரும்போது, அந்த சமயத்தில் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டா. நாக்குதானே பக்கத்துல இருக்கும்? நாக்கைப் பார்த்து, ஹே நாவே! இப்படியே மதுரமா "கோவிந்த தாமோதர மாதவேதி"ன்னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்குறேன், உன்னையே கேட்டுக்குறேன். நாக்கு எப்பவுமே நம்முடைய தொண்டையில்தான் இருந்துண்டு இருக்கு. அதனால நாக்கையே கேட்டுப்போம் அப்படின்னு இந்த ஸ்லோகம் சொல்லுது.

சுவாமிகளுக்கு இத்தனை பிரியம் இந்த கோவிந்த தாமோதர நாமத்துல. அதுல இருந்து எனக்கு ஒரு அருமையான உபதேசமா எழுதிக் கொடுத்திருக்கார்.

"குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" அப்படின்னு மஹா பெரியவாளையும், சிவன் சாரையும், சுவாமிகளையும், காமாட்சியையும் தியானம் பண்ணி நாலு தடவை இந்த "குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி" அப்படின்னு சொல்லு.

அதுக்கப்புறம்: 

த்⁴யேய꞉ ஸதா³, யோகி³பி⁴ரப்ரமேய꞉, சிந்தாஹர:, சிந்திதபாரிஜாத꞉ .

கஸ்தூரிகாகல்பிதநீலவர்ணோ, கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ..

இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா, யோகிகளால் எப்போதும் தியானம் பண்ணப்படுவதும், அப்ரமேய: - எல்லையற்றதும், சிந்தாஹர: - கவலைகளைப் போக்குவதும், சிந்தித பாரிஜாத: - தன்னை நினைப்பவர்களுக்குப் பாரிஜாதத்தைப் போல், கற்பக விருட்சத்தைப் போல் வேண்டுவதைக் கொடுப்பதும், கஸ்தூரிகா கல்பித நீலவர்ண: - கஸ்தூரியைப் போன்ற நீல வர்ணம் கொண்டதுமான அந்த கோவிந்தனுடைய நாமங்களை "கோவிந்த தாமோதர மாதவேதி" அப்படின்னு ஜபம் பண்ணு.

இதை ஒரு தடவை சொல்லிட்டு: 

"கோ³விந்த³ கோ³விந்த³ ஹரே முராரே, கோ³விந்த³ கோ³விந்த³ முகுந்த³ க்ருʼஷ்ண .

கோ³விந்த³ கோ³விந்த³ ரதா²ங்க³பாணே, கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி .. "

அப்படின்னு 72 தடவை சொல்லுங்கோ. 72 தடவை சொன்னா இந்த ஸ்லோகத்துல 14 பகவானுடைய நாமங்கள் இருக்கு. ஒரு சகஸ்ரநாமம் பண்ணிண மாதிரி ஆயிடும். விஷ்ணு சகஸ்ரநாமம் மாதிரி. எங்கேயும், யாரும், எப்போதும் சொல்லலாம். இந்த நல்ல நாள்ல உங்களுக்கும் இதைச் சொல்லணும்னு தோணித்து. 

ஜானகி ஜீவன ஸ்மரணம் 

ஜய ஜய ராம ராம!












Om.